Monday, March 14, 2022

தமிழக அரசின் கடல் பசு பாதுகாப்பகம் - அதன் முக்கியத்துவமும் மீனவர் நலனும்

 தமிழக அரசு கடந்த 03.09.2021 அன்று வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை வெளியிட்டது.  இந்தியாவிலயே முதன் முறையாக தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய கடலோர பகுதிகளை கடல் பசு பாதுகாப்பகம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது.  மேலும், கடந்த ஜனவரி, 2022 இந்த திட்டதிற்காக அரசாணை வெளியிடப்பட்டு, ஐந்து கோடி நிதி ஒதுக்கபட்டு, மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பபட்டுள்ளது.  தமிழ் நாடு வனத்துறை மற்றும் இந்திய வனவிலங்கு மையத்தின் நீண்ட முயற்சிகளின் மூலம் இந்த பாதுகாப்பகம் இறுதி வடிவம் பெற்று உள்ளது. 

 

பல ஆயிரம் ஏக்கர் பரவியுள்ள கடல் தாழைகளின் (seagrass) அல்லது கடற் புற்களின் தோற்றம்.

இந்தியாவில் சுமார் 7500 கிலோமீட்டர் நீள கடற்கரைகள் அமைந்துள்ள நிலையில்,  வெறும் 68 கிமீ நீளமுள்ள தஞ்சை மற்றும் புதுக்கோட்டை  கடல் பகுதிகள் மட்டும் ஏன் கடல் பசுக்கள் பாதுகாப்பகமாக தேர்வு செய்யபட்டுள்ளன? இந்த பகுதியின் நெய்தல் நில சிறப்பு என்ன என்பதையும், அதன் மூலம் மீனவர் அல்லாத மக்களும் எப்படி பயன் பெறுகின்றனர் என்பதை பார்ப்போம்.

 

இந்த கடல் பசு பாதுகாப்பகம், தஞ்சை மாவட்ட கடலோர பகுதிகள் முழுவதையும் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கி (அதிராம்பட்டினம் முதல் அம்மாபட்டினம் வரை) சுமார் 500 சதுர கிலோமீட்டர் கடற்பரப்பை கொண்டுள்ளது. கடல் கரையிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் வரை உள்ள கடல் பகுதிகள் கடல் பசு பாதுகாப்பகமாக அறிவிக்கபட்டுள்ளன.   இதற்கு காரணம், கடல் பசுக்களின் உணவான கடல் புற்கள் (கடல் தாழைகள்) இந்த கடல் பரப்பில், மாபெரும் வயல்வெளி (கோட்டகம்) போன்று கடல் கரையிலிருந்து சுமார் 8 – 9 கிலோமீட்டர் வரை பரவி உள்ளதே ஆகும். 



                                                               (image from https://en.wikipedia.org/wiki/Palk_Bay)

 

கடல் பசு என்பது sea cow என்ற ஆங்கில பெயரின் translation சொல். இந்த அரிய கடல் விலங்கு ஐந்து கோடி வருடங்களுக்கு முன்பே தோன்றி, இரண்டாயிரம் வருட நெய்தல் நில தமிழர்களின் வாழ்வோடு இருந்து வருபவை, எனவே இந்த விலங்குகளை காக்கும்போது,  இவற்றின் பழந்தமிழ் பெயரையும் காக்கும்பொருட்டு இவற்றை ஆவுரியா (தஞ்சை மாவட்ட வழக்கு) அல்லது ஆவுலியா (இராமநாதபுரம் மாவட்ட சொல் வழக்கு) என அழைப்பதே சிறப்பு இந்த கட்டுரையில் ஆவுரியா என குறிப்பிடுகிறேன்.  

 



பல ஆயிரம் ஏக்கர் பரவியுள்ள கடல் தாழைகளின் (seagrass) அல்லது கடற் புற்களின் - கரும்பு தாழை வகைகளின் தோற்றம்.


அதே போன்று, ஆவுரியாக்கள் உண்ணும் கடல் புற்கள் என்ற வார்த்தை “seagrass” என்ற ஆங்கில வார்தையின் translation. இந்த கடல் தாவரங்களின் நெய்தல் நில தமிழ் பெயர் “கடல் தாழைகள்”, இவை கடலுக்குள் நான்கு தழைத்து, கடல் பரப்பில் வேர்களை கிளை விட்டு பரப்பி மண்ணை இறுக பிடித்து கொண்டு இருக்கின்றன. 

 

காவிரியின் டெல்டா மாவட்டமாக விளங்கும் தஞ்சை மாவட்டம், வண்டல் மண்ணால் வளமாக இருப்பதை போல, டெல்டா மாவட்ட ஆறுகள் கடலில் கலக்கும்போது வளமான வண்டலை கடலோரத்திலும், கடலுக்கு அடியிலும் படிய செய்கின்றன.  எனவே, கடலோரத்தில் பல ஆயிரம் ஏக்கர் அலையாத்தி காடுகளும், கடலுக்கு அடியில் பல ஆயிரம் ஏக்கர் கடல் புற்களும் (seagrass) இயற்கையாக வளர்கின்றன. 


 

கஜா புயலில் இந்த அலையாத்தி காடுகளும், கண்ணால் பார்க்க முடியாத, கடலுக்கு அடியில்  கடல் தாழைகளும் மக்களை அரணாக காத்து உயிர்தியாகம் செய்துள்ளன.  அவற்றை மீண்டும் வளர செய்வதன் மூலம் இந்த மாவட்டங்களின் கடலோரத்தையும், மக்களையும் இயற்கை பேரிடரால் எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்பிலிருந்து காக்கலாம். 

 

நெல் வயல் கோட்டகங்களை போன்ற இந்த கடல் தாழை கோட்டகங்கள், கடலுக்கு அடியில் தஞ்சை மாவட்டதில் சுமார் 12,500 ஹெக்டேர் அளவுக்கும், புதுக்கோட்டை மாவட்டதில் சுமார் 22,000 ஹெக்டேர் அளவுக்கும் உள்ளன என்பதை ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது.  இவை கடலுக்குள் 8 – 10 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ளன.  அந்த தொலைவு வரை உள்ள கடலின் தரைபகுதி, காவிரி ஆற்று வண்டல் மண் மற்றும் கடல் சேறு கலந்து வளமாக இருப்பதாலும், சூரிய ஒளி கடல் தரையை தொடும் அளவுக்கு ஆழம் குறைவாக (அதிக பட்சம் சுமார் 25 அடி க்குள்) இருப்பதாலும், கடல் தாழைகள் வளர உகந்த சூழல் நிலவுகிறது. 

 

கடல் தாழைகளில் பதினான்கு வகையான தாழைகள் உள்ளன.  சில சென்டிமீட்டர் வரை மட்டுமே வளரும் இலை தாழை முதல் சுமார் நான்கு அடி வரை வளரும் வாட்டாளை, மற்றும் இரண்டு அடி வரை வளரும் கரும்பு தாழை என இவற்றில் பல வகைகள் உள்ளன.   கடல் தாழைகளின் ஒரு செடியை பிடுங்கினால், ஒரு நீளமான தரை அடி தண்டின் ஒரு முனையை பிடுங்குவதாக நினைத்து கொள்ளுங்கள்.  இந்த தரையடி தண்டுகள் ஒரு சிக்கலான வலைபின்னலை உருவாக்கி ஒரு போர்வை போல கடல் பரப்பில் ஒன்றுடன் ஒன்று பின்னி வளர்ந்து தழைக்கின்றன, இதனால் கடல் நீரோட்டங்களின் மூலம் ஏற்படும் அரிப்பையும், புயல் காலங்களில் அலைகளின் சீற்றதையும் மட்டுப்படுத்துகின்றன.    கடற்கரைகள் பாதுகாப்பிற்கு கடலோரத்தில் அலையாத்தி காடுகளும், கடலுக்குள் கடல் தாழைகளும் வேண்டும்.   

 

கடல் பாசியை இதில் குழப்பி கொள்ள வேண்டும்.  கடல் பாசி என்பது வேறு, கடல் தாழை என்பது வேறு.  இலை, தண்டு, வேர் என வேறுபாடு கொண்டு இருப்பவை கடல் தாழைகள் (seagrasses).  ஆனால், இலை, தண்டு வேர் என வேறுபாடு அற்றவை கடல் பாசிகள் (seaweeds).

 

சென்னை முதல் கோடியக்கரை வரை தமிழகத்தின் கடற்கரை வங்காள விரிகுடா கடலை நோக்கி இருப்பதால், பெரிய அலைகள் உருவாகி மணல் பாங்கான கடற்கரையை கொண்டுள்ளது.   அதனால் இங்கு கடலில் தாழைகள் இல்லை.       

 

ஆனால், நாகை மாவட்டத்தின் கோடியக்கரை முதல் திருவாருர், தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுர மாவட்டங்களின் கடற்கரை பகுதிகளுக்கு மறு கரையில் இலங்கை இருப்பதால், இந்த இரண்டு கரைகளுக்கு உட்பட்ட 13000 சதுர கிலோ மீட்டர் கொண்ட பாக் வளைகுடாவில் பெரிய கடல் அலைகள் உருவாக வாய்ப்பு இல்லை.  இதனால் தான் இந்த பகுதிகளில் 2004 சுனாமி அலை பாதிப்பு தடுக்கபட்டது. 

 

அதாவது, வங்காள விரிகுடா மற்றும் இந்தியா பெருங்கடல்களில் இருந்து தனித்த கடல் பகுதியாக பாக் வளைகுடா உள்ளது.  வாடை காற்று வீசும் போது இராமநாதபுரத்தின்  (தெற்கு பாக் வளைகுடா)  வடக்கு கடல் பகுதியில் அலைகள் ஏற்படும், அதேபோல தென்மேற்கு பருவ காற்று வீசும்போது திருவாரூர் மாவட்டத்தில் சேறு கலந்த கடல் அலைகள் ஏற்படும் (வடக்கு பாக் வளைகுடா) கடல் அலைகள் ஏற்படும்.  இந்த இரண்டு பருவகாலங்களிலும் மனோரா குடா (உள்நோக்கி வளைந்த கடல் பகுதி), கட்டுமாவடி குடா மற்றும் அம்மாபட்டிணம் குடா உள்ளிட்ட கடல் பகுதிகள் அமைதியாக, பாதுகாப்பாக இருக்கும்.  இந்த கடல் பகுதிகளில் கடல் தாழைகள் செழித்து வளர்ந்து காணப்படுகின்றன.    

 

மீனவர்களின் கூற்றுப்படி மணல் மேல்குடியின் கோடி முனைக்கு தெற்கே கடல் சற்று அலை அதிகமாகவும் (தரை கடல்), அதன் வடக்கே அலை குறைவாகவும் (குடா கடல்) இருக்கும் என்று தெரிகிறது.  இந்த தரைக்கடல், குடா கடல் போன்றவை பாக் வளைகுடாவின் வடக்கு மற்றும் மத்திய கடலோர மீனவர்களின் வழக்கு மொழி.  புதுக்கோட்டை மாவட்ட மணல் மேல் குடியின் கோடி முனைக்கும், நாகை மாவட்ட கோடியகரைக்கும் ஒரு வளைந்த, கடலுக்குள் மூழ்கிய கடல் திட்டு மூலம் தொடர்பு இருப்பதாக மீனவர்கள் கூறுகிறார்கள்.  இந்த இடத்தில் ஆழம் குறைவான திட்டின் சாய்மானத்தில் நீரோட்டங்கள் ஏற்படுவதால் மீனவர்கள் இங்கு மீன்பிடிக்க செல்வது வழக்கமாம்.   ஒரு காலத்தில் வட இலங்கை மற்றும் தமிழக கடல் பகுதிகள் தொப்புள் கோடி போல் இணைந்து இருந்ததற்கு இந்த கடலடி திட்டு ஒரு சான்றாக இருக்க கூடும். 


அப்படி இருந்தால் அவை மனித நாகரிகத்திற்கு முற்பட்ட கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்பு இருக்கலாம்.  தற்போது இந்த பகுதி, மீன்கள் அதிகம் கிடைக்கும் பகுதியாக மீனவர்களால் கருதப்படுகிறது.   இதை அறிவியியல் ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும்.   

 

கடற்கரையிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் வரை கடல் தாழை ஆராய்ச்சி பணிக்கு சென்றபோது, கொண்டல் காற்று வீசும் காலங்களில் பல வண்ணத்து பூச்சிகள்  கிழக்கு திசையிலிருந்து பறந்து செல்வதையும், சில எங்கள் படகில் அமர்ந்து செல்வதையும் கண்டு இருக்கிறோம், இந்த வண்ணத்து பூச்சிகளை போல ஆவுரியாக்களும் (கடல் பசு) இலங்கைக்கும், இந்தியாவிற்கும் பருவகாலங்களுக்கு தகுந்தாற்போல இடம்பெயர நிறைய வாய்ப்புள்ளது.  

 

காவிரி கிளை நதிகளின் நீர் கடலில் கலக்கும்போது, டெல்டா மாவட்டங்களின் கடல் பகுதியில் நீரின் உப்பு தன்மை குறைந்து, கடல் நீரில் கலக்கல் ஏற்படுகிறது.  டீ கஷாயம் வடிகட்டும்போது பாலில் கலப்பது போல, அலையாத்தி காடுகளின் மக்கிய இலைகள் மற்றும் வண்டல் மண் நிறைந்த நீர் கடலில் கலக்கிறது.  இதனால், ஆற்றின் ஊட்டசத்து மிகுந்த நீர் அதிகரித்து, கடலுக்குள் சூரிய ஒளி குறைந்து, உப்பு குறைந்து தஞ்சை மாவட்ட கடல் செந்நிறமாக இருக்கும்.  மேலும், இந்த சமயத்தில் ஏற்படும் கடல் நீர் உப்பு குறைவால்,  பல ஆயிரம் ஹெக்டேர் அளவில் வளர்ந்துள்ள கடல் தாழைகளின் இலைகள் அழுகி கடலில் மேலும் ஊட்டசத்து அதிகரிக்கும்.   (கடல் தாழைகளின் தரையடி தண்டுகள் கடலுக்கு அடியில் உயிரோடு இருப்பதால் அவை மீண்டும் வெயில் காலத்தில் வளர்ந்து விடும்.) 

 

மேட்டூர் அணையில் நாம் போராடி பெரும் அதனை டி‌எம்‌சி தண்ணீரும், டெல்டா பகுதி விவசாயம் போக மீதம் இந்த கடலில் தான் கலக்கிறது.  இந்த ஊட்டசத்து மிகுந்த கடல் நீர், கடல் நீரோட்டத்தால் கோடியக்கரை முதல் ராமேஸ்வரம் வரை உள்ள கடல் பகுதிகளுக்கும், இலங்கை கடல் பகுதிகளுக்கும் அடித்து செல்லப்பட்டு, இந்த சத்து மிகுந்த நீரில், கோடிக்கணக்கான தாவர மற்றும் விலங்கு நுண்ணுயிரினங்கள் உற்பத்தியாகி, அதை உண்டு இறால்கள், நண்டுகள் மற்றும் மீன்கள் உற்பத்தியாகின்றன.  இதனால் திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட பகுதி மீனவர்களுக்கு நல்ல மீன்கள் கிடைக்கின்றன.  பட்டுக்கோட்டை போன்ற நகரங்களில் இருப்போருக்கு கடல் உணவு புரோட்டின் வருடம் முழுவதும் கிடைக்கிறது, குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான புரதம் குறைவான விலையில் கிராமங்களுக்கு சைக்கிள் மீன் வியாபாரிகள் மூலம் செல்கிறது.  பல நூறு கோடி ரூபாய்க்கு கடல் உணவு ஏற்றுமதி மூலம் அரசுக்கும் வருமானம் கிடைக்கிறது. 


கடல் தாழையில் கணவாய் மீன் முட்டையிட்டுள்ள காட்சி (இடம் தஞ்சை மாவட்ட கடற் பகுதி - போட்டோ by ஓம்கார் ஃபவுண்டேஷன் )

 



கடல் தாழைகளில் பதுங்கியுள்ள தாழஞ்சுறா - இடம் புதுக்கோட்டை மாவட்ட கடற்பகுதி  


இலங்கையின் வட மேற்கு பகுதியில் பெரிய ஆறுகள் கலப்பதில்லை என்பதால் அங்கு கடல் ஊட்ட சத்து நீர் குறைந்த பாறு கடல் எனப்படும், எனவே கடல் நுண்ணுயிரினங்கள் - மீன்கள் உற்பத்தியாக தேவையான ஊட்டசத்து தமிழக கடல் பகுதிகளில் இருந்து நீரோட்டம் மூலம் பரவி அங்கும் மீன்கள் அதிகரிப்பதற்கு உதவி செய்ய அதிக வாய்ப்புள்ளது. இதை பற்றிய ஆராய்ச்சி எதிர் காலத்தில் செய்ய வேண்டும்.  நீரோட்டங்களுக்கு எல்லையில்லை.

 

ஆவுரியாக்கள் (கடல் பசுக்கள்), வெயில் காலங்களில் கடல் தாழைகள் வளரும்போது, உணவை தேடி நம் கடலோரத்திற்கு வருகின்றன.  ஒரு நாளைக்கு 40 கிலோ வரை கடல் தாழைகளை மேய்ந்து கொண்டே தொடர்ந்து நகர்கின்றன.  காடுகளில் யானைகள் விதை பரவலுக்கு உதவி காடுகளை உற்பத்தி செய்ய உதவுவது போல, ஆவுரியாக்களும் (கடல் பசுக்கள்), கடல் தாழைகளின் (seagrass) விதை பரவலுக்கு உதவுகின்றன, அதனால் நம் கடலில் மீன் வளம் அதிகரித்து மீனவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது.  

 

எனவே, தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் தமிழக அரசின் வனத்துறை மூலம் அமையவுள்ள “கடல் பசு பாதுகாப்பகம்”, மீனவர்களின் நலனுக்கானது என்பதில் எந்த விட ஐயமும்மில்லை! ஆவுரியாக்கள் பாதுகாத்து கடல் வளம் செழித்தால், மீனவர் நலன் மேம்படும். 

 

ஆவுரியாக்கள் கடலில் வாழும் மனிதர்கள். அவர்களின் வாழ்வியலை பற்றி – அவர்களை ஏன் பாதுகாக்க வேண்டும் என்பதை பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்...