Tuesday, March 26, 2024

ஆழிக் கதைகள் - 1 (பாலாஜி வேதராஜன்)

ஆழிக்கதைகள் - 1 


ஒட மர நிழல் தேடி தாகத்தில் அலையும் குருகும் - முற்பகல்


கடல் ஈராட்டித் தணலில் உமுறியும் கருகும்.


சான்றோரே அறிவீர் - பின் 


விடாச்சோனை வெளுத்துப் பெய்யும் - பிற்பகல் 


படல்  அற்ற உவர்நீரும் புனல் போல் ஓடும். 


தடமற்ற பெரும் மணற்றிட்டு பேரிடரினின்று காக்கும் அதுபோல் - எப்பகல்


வேளையிலும்  தாய் திருநாட்டின் கடல் வளம் காப்பிரே.


- பாலாஜி வேதராஜன்


---------------------------------


விளக்கம்: 

ஓட மரங்கள் எனப்படும் கடலோரங்களில் வளரும் மரங்களின் நிழலை தேடி குருகு (பறவை) அலையும் வேளையில், ஈராட்டி (கடல் காற்று எந்த திசையிலும் நகராமல் இருக்கும்போது) ஏற்படும் வெப்பத்தில் உமுறி எனப்படும் கடலோர செடிகளும் கருகும்.  


பொதுவாக உமுறிகள் நீர்ச்சத்து மிக்க தாவரங்கள், அவை நன்கு வறட்சியை தாங்கும்.  அவையும் கூட கருகும் என்று சொல்வதன் மூலம் – முற்பகல் கடலோர நில வெயிலின் தாக்கத்தை விளக்க முற்பட்டுள்ளேன்.   உமுறிகள் நம் கடல் பகுதியில் மூன்று வகை உண்டு. பெரும்பஞ்ச காலத்தில் இவை நம் மக்களால் உணவாக எடுத்து கொள்ளப்பட்டதாகவும், சில நாடுகளில் இவை சாலட் உணவாக உட்கொள்ளும் பழக்கம் இருப்பதாக தெரிய வருகிறது. வளி மண்டல கார்பன் டை ஆக்சைடை குறைக்கும் blue carbon தாவரங்களில் உமுரிகள் முக்கிய அம்சம். 


ஈராட்டி - கடல் காற்றும் நிலக் காற்றும் சம நிலையில் ஒன்றை ஒன்று தள்ள முடியாமல் இருக்கும். சில நொடிகள் முதல் சில நாட்கள் வரைக்கூட இந்நிலை தொடரலாம்.  பின்னர் வலுப்பெறும் காற்று அன்றைய நாளின் தட்ப வெப்ப நிலையை முடிவு செய்யும்.  


இந்த ஈராட்டி ஏற்படும்போது பிற்பகலில் கடலில் – கடலோரங்களில்  கன மழை (சோனை) பெய்யும்  என பாரம்பரிய மீனவர்கள் கூறுவார்கள். அதனால் கடலில் மழைத்துளி விழும்போது ஏற்படும் நிற மாற்றம் நீரோட்டமாக ஆறு போல செல்லும்.  நீரோட்டங்கள் வெள்ள, வடு (high tide and low tide) காரணமாக தினசரி ஏற்படும்.  மழை வெள்ள காலங்களில் அவற்றின் வேகம், நிறம் போன்றவை மாறுபாடு அடையும்.  


மனித காலடி படா (undisturbed) கடலோர மணல் குன்றுகள் உயர்ந்து நிற்கும், பேரிடர் காலங்களில் காக்கும்...


முதல் முயற்சி...இலக்கணப்பிழை இருப்பின் பொறுத்தருள்வீர்...