சர்வ தேசமும் சிரம் திரும்பிப் பார்க்கும்
தேசம் எங்கள் தேசம்.
குருதிப் பெருக சாய்ந்த போதும்,
காத்த கொடி வீழா,
குமரனின் தேசம் எங்கள் தேசம்.
கப்போலோட்டிய தமிழன் முதல்
காமராசர் வரை,
கண்ட தேசம் எங்கள் தேசம்..
காளி வாழ் வங்கம் முதல்,
காந்தாரம் வரை பரந்த
தேசம் எங்கள் தேசம்.
பாரதியின் வரி,
கலாமின் கனவு,
நெஞ்சில் நான்முக அரிமா என
பகலிரவு பாராது சீராய் சான்றோர் பலர்
பாரதப் பணி செய்யும்
தேசம் எங்கள் தேசம்.
சித்தாந்த சாத்திரங்கள் நாளும்
சரியை, கிரியை, யோகம், ஞானம் - என
சைவ நாற்பதங்கள் நாளும்
திருமுறைகள் பனிரெண்டும் - அருளும்
தென்னாடுடையானின்
தேசம் எங்கள் தேசம்.
கொடுவரியின் சுந்தர வங்கம்,
கொடுப்புலியின் கோதாவரி தெலுங்கம்,
அரிபடா ஆமையின் கலிங்கம்,
ஆவூரியா காக்கும் தமிழரின் அகம் - கடல்
அடிமட்ட நீர் எழும்பி வளம் கொடுக்கும் கேரளம்,
இயற்கை இயல்மாறா நெதராணியின் கருநாடகம்,
குறிஞ்சி நெய்தல் கூடும் கொங்கணி மராட்டியம்,
பாலை நெய்தல் புணர் நில உப்பில்
பாங்காய் நீந்தும் சிந்து ஒட்டகம்,
பாரீர் எம்
கடல்சார் நில வளத்தை!
காப்போம் எம் தேச கடல் வளத்தை!
Balaji Vedharajan
--
பொருள்
காந்தாரம் - தற்போதைய ஆப்கானிஸ்தான்
கொடு வரி - புலி
கொடுப்புலி - fishing cat
அரிபடா - ஆமைகள் கூடும் இடம்
கலிங்கம் - ஒரிசா
ஆவூரியா - கடல் பசு
அடிமட்ட கடல் எழும்புதல் - upwelling
நெதரணி - netrani island
உப்பில் நீந்தும் ஒட்டகம் - kharai camel
Tuesday, September 30, 2025
சர்வ தேசமும் சிரம் திரும்பிப் பார்க்கும் தேசம் எங்கள் தேசம்.
Sunday, September 21, 2025
"ஈர நிலங்கள் காப்போம்"
"ஈர நிலங்கள் காப்போம்"
---------------------------------
பொறியியல் பிழை இல்லா கூட்டில்,
ஓய்வில் நீர்காகப் பறவை ஒன்று
மெல்ல மணிக்கண்ணுறங்க..
வாஸ்துவும் வாசலும் இல்லா,
மேல் திறந்த அதன் கூடு,
மழையும்,
வெயிலும்,
வெளிச்சமும்,
எப்போதும் வரலாம் என
இயற்கையின் இயல்பாய் இருக்க...
காற்றில்,
கிளைகளோடு ஆடும்,
கடனும் எடையுமில்லா
அதன் கூடு - அது குறித்து,
கிஞ்சித்தும் பயமில்லை அப்பறவைக்கு.
விரிக்கச் சிறகும்,
வானமும் இருக்க பயமேன்?
அப்பறவை
எங்கும் இடம்பெயர்வதில்லை...
அதற்கான
உணவும்,
உறைவிடமும்
ஒருங்கே இங்கிருக்க,
தூர வலசைக்கு அவசியமுமில்லை...
மூர்ச்சையாகும் இருள்சூழ் மண்ணில்,
வேர்களை நேர் செலுத்தி
உவப்பாய் உவர்ப்பில் நிற்கும் தில்லை – அது தன்னில்
பறவை கூடு கட்ட
கிளை வாடகையோ,
காற்றில் இலை அசைய
தனிக்காசோ கேட்பதில்லை.
வரும் ஐப்பசியும்,
வாடைக்காற்றும் வந்தால்,
இறையும், இரையும் நிரம்பி இருக்கும்
எம் ஈரத் தமிழ் நிலங்கள்,
எல்லா பறவைகளுக்கும்
இனம் பெருக இடம் கொடுத்து
உணவளித்து உயிர் கொடுக்கும்...
"யாவரும் கேளிர்" எனும்
தமிழரின் ஈர நெஞ்சம் போல்.
“ஈர நிலங்கள் காப்போம்”.
Balaji Vedharajan
Friday, September 12, 2025
கற்றதோ சிறு கடலறிவு.
கற்றதோ சிறு கடலறிவு.
பெற்றதோ நுனித் துரும்பளவு,
நிற்பதோ நின் தாள் நோக்கி -
சிந்தையில்,
கொண்டதோ சிவத்தொண்டு.
ஓம்காரமாய் பற்றியதோ
உம் கழல்,
ஈட்டியதோ உம் அருள் தவிர்த்து ஒன்றுமில்லை!
நெற்றியில்,
இட்டதோ உம் திருநீறும்,
ஆக்கினையும்,
யாக்கையதில் - தீ
சுட்டதும் ஒருபிடி நீறே யாவர்க்கும்.
உயிர்
விண்டதும் - சுடலைத் தணலில்,
தெளித்த பால்
பட்டதும் பந்தம் நீங்க,
கரையினின்று
விட்டதும் கடல் நீர் கலந்து - ஊறி
பட்டென உடைபடும் நீறுநிறை கலமும்
என்பும் உறவும்.
பிறவி
கட்டவிழ்த்து,
நின் நினைவில்
ஆழ்ந்து - எண்ணத்தில்
எட்டா இறை கலந்து உள்ளுருகும்
அடியெனின் சடையானே!
கலப்பேன் யான் உன்னுடனே,
ஒரு பிடி எரி நீறாய்...
தில்லையனே!
நீலக் கடலானே!
நீ அறிவாயோ,
அடியேன் எம் தவத்தை? 🙏
Balaji Vedharajan
Subscribe to:
Posts (Atom)