Tuesday, September 30, 2025

தேசம் எங்கள் தேசம்.

அருவ அரணே!

அன்பின் உருவே,

அனைத்திற்கும் ஆதாரமே, 

எம் சிவனே!

அடியாரை  ஆளும்,

நின்சக்தியின் வெளிப்பாடே 

அனைத்துயிரினமே! 


படைத்தல்,

காத்தல்,

அழித்தல், 

மறைத்தல், 

அருளல் என 

அனைத்தும் நின்செயல் எனும், 

சைவ சித்தாந்தம் போற்றும் – அறியாதார் 

சிந்தனைக்குள்  சிக்காத

சிவபரம்பொருளே! 


இமயத்தின் ருத்ரனே! 

தென்னகத்தின் சிவனே !

சோழரின் பெருமையே!

ஆன்மிகத் தமிழ் வளர்த்த,  

அடியாரின் அண்ணலே!

நின் தத்துவம் பல்லாண்டு வளர்ந்தோங்கும் 

இப் பாரதத்தின் பரம்பொருளே! 


அருவமாய் முனிவர்க்கு, 

அருளும் சித்தானந்த,

ஆன்மிக பரம்பொருளே!

ஒளிப்பிழம்பே!

  

திருவுருவமாய் பக்தர்க்கு, 

திருமேனியில்,

தில்லையிலுறையும் நடராசனே !


அருவுருவமாய் விளங்கும் என 

அடியார் நல்வாக்கின்படி, 

அடியேனின் சிற்றறிவுக்கு 

விளங்கா ஒளி விளக்கே, 

உனை என்று காண்பேனோ ?🙏🙏


Balaji Vedharajan

Sunday, September 21, 2025

"ஈர நிலங்கள் காப்போம்"

"ஈர நிலங்கள் காப்போம்"
---------------------------------
பொறியியல் பிழை இல்லா கூட்டில்,
ஓய்வில் நீர்காகப்  பறவை ஒன்று 
மெல்ல மணிக்கண்ணுறங்க..  
வாஸ்துவும் வாசலும் இல்லா,  
மேல் திறந்த அதன் கூடு, 
மழையும், 
வெயிலும்,
வெளிச்சமும், 
எப்போதும் வரலாம் என 
இயற்கையின் இயல்பாய் இருக்க...

காற்றில், 
கிளைகளோடு ஆடும், 
கடனும் எடையுமில்லா 
அதன் கூடு - அது குறித்து,
கிஞ்சித்தும் பயமில்லை அப்பறவைக்கு. 

விரிக்கச் சிறகும்,
வானமும்  இருக்க பயமேன்? 

அப்பறவை  
எங்கும் இடம்பெயர்வதில்லை... 
அதற்கான 
உணவும், 
உறைவிடமும் 
ஒருங்கே இங்கிருக்க,
தூர வலசைக்கு அவசியமுமில்லை...

மூர்ச்சையாகும் இருள்சூழ் மண்ணில்,  
வேர்களை நேர் செலுத்தி 
உவப்பாய் உவர்ப்பில் நிற்கும் தில்லை – அது தன்னில் 
பறவை கூடு கட்ட 
கிளை வாடகையோ,
காற்றில் இலை அசைய
தனிக்காசோ  கேட்பதில்லை. 

வரும் ஐப்பசியும்,  
வாடைக்காற்றும் வந்தால், 
இறையும், இரையும் நிரம்பி இருக்கும் 
எம் ஈரத் தமிழ் நிலங்கள், 
எல்லா பறவைகளுக்கும் 
இனம் பெருக இடம் கொடுத்து 
உணவளித்து உயிர் கொடுக்கும்...
"யாவரும் கேளிர்" எனும்
தமிழரின் ஈர நெஞ்சம் போல்.

“ஈர நிலங்கள் காப்போம்”.  

Balaji Vedharajan

Friday, September 12, 2025

கற்றதோ சிறு கடலறிவு.

கற்றதோ சிறு கடலறிவு. 
பெற்றதோ நுனித் துரும்பளவு,

நிற்பதோ நின் தாள் நோக்கி -
சிந்தையில்,

கொண்டதோ சிவத்தொண்டு.
ஓம்காரமாய் பற்றியதோ 
உம்  கழல்,

ஈட்டியதோ உம் அருள்  தவிர்த்து ஒன்றுமில்லை!
நெற்றியில்,

இட்டதோ உம் திருநீறும், 
ஆக்கினையும்,

யாக்கையதில் - தீ 
சுட்டதும் ஒருபிடி நீறே யாவர்க்கும்.

உயிர் 
விண்டதும் - சுடலைத் தணலில்,

தெளித்த பால் 
பட்டதும் பந்தம் நீங்க,

கரையினின்று 
விட்டதும் கடல் நீர் கலந்து - ஊறி 
பட்டென உடைபடும் நீறுநிறை கலமும்
என்பும் உறவும்.

பிறவி
கட்டவிழ்த்து,
நின் நினைவில் 
ஆழ்ந்து - எண்ணத்தில்

எட்டா  இறை கலந்து உள்ளுருகும் 
அடியெனின் சடையானே! 

கலப்பேன் யான் உன்னுடனே,
ஒரு பிடி எரி நீறாய்... 
தில்லையனே!

நீலக்  கடலானே!

நீ அறிவாயோ, 

அடியேன் எம் தவத்தை? 🙏

Balaji Vedharajan