Sunday, September 21, 2025

"ஈர நிலங்கள் காப்போம்"

"ஈர நிலங்கள் காப்போம்"
---------------------------------
பொறியியல் பிழை இல்லா கூட்டில்,
ஓய்வில் நீர்காகப்  பறவை ஒன்று 
மெல்ல மணிக்கண்ணுறங்க..  
வாஸ்துவும் வாசலும் இல்லா,  
மேல் திறந்த அதன் கூடு, 
மழையும், 
வெயிலும்,
வெளிச்சமும், 
எப்போதும் வரலாம் என 
இயற்கையின் இயல்பாய் இருக்க...

காற்றில், 
கிளைகளோடு ஆடும், 
கடனும் எடையுமில்லா 
அதன் கூடு - அது குறித்து,
கிஞ்சித்தும் பயமில்லை அப்பறவைக்கு. 

விரிக்கச் சிறகும்,
வானமும்  இருக்க பயமேன்? 

அப்பறவை  
எங்கும் இடம்பெயர்வதில்லை... 
அதற்கான 
உணவும், 
உறைவிடமும் 
ஒருங்கே இங்கிருக்க,
தூர வலசைக்கு அவசியமுமில்லை...

மூர்ச்சையாகும் இருள்சூழ் மண்ணில்,  
வேர்களை நேர் செலுத்தி 
உவப்பாய் உவர்ப்பில் நிற்கும் தில்லை – அது தன்னில் 
பறவை கூடு கட்ட 
கிளை வாடகையோ,
காற்றில் இலை அசைய
தனிக்காசோ  கேட்பதில்லை. 

வரும் ஐப்பசியும்,  
வாடைக்காற்றும் வந்தால், 
இறையும், இரையும் நிரம்பி இருக்கும் 
எம் ஈரத் தமிழ் நிலங்கள், 
எல்லா பறவைகளுக்கும் 
இனம் பெருக இடம் கொடுத்து 
உணவளித்து உயிர் கொடுக்கும்...
"யாவரும் கேளிர்" எனும்
தமிழரின் ஈர நெஞ்சம் போல்.

“ஈர நிலங்கள் காப்போம்”.  

Balaji Vedharajan

No comments: