Saturday, December 20, 2025

தேசம் காக்கும் சாமிகள்


தேசம் காக்கும் சாமிகள்!


இறுகப்பற்றிய நம்பிக்கை,
இறுமாப்புடன் தர்க்கம்,
நாளெல்லாம் கதைப்பேசி,
நீங்கள் நன்றாக
உறங்கும் வேளையில்...
நதிகள் எல்லாம்
ஒரே கடலாகுமென
தெரிந்தும் தர்க்கமேன்?
எனக் கடவுள்
கவலையில் ஆழ்ந்திருப்பார்.


அவருக்கு அருகில்,
சிகர உச்சியில்,
சில்லிடும் குளிர்காற்றில்,
சீரியப் பணியில்,
இரவெல்லாம் விழித்திருக்கும்
தேசத்தின் புதல்வர்கள்,
தினம் சுதந்திரம்
காக்கும் பகத்சிங்குகள்.
எல்லைக்காவல் சாமிகள்.

வெள்ளையனிடம் அடிவாங்கி
உயிர் கொடுத்து
இரவில் பெற்றதை,
அவர்களிடம் ஒப்படைத்து,
நிம்மதியாய் துயிலுங்கள்,
நேசித்தாலும் வெறுத்தாலும்,
நேசமுடன் உங்களையும்,
கவசமாய் காக்கும்
சீருடைச் சாமிகள்.

அங்கே எல்லையில்
அடரிருளில் அளவளாவ,
உற்றார் யாருமில்லை.
இமயத்தின் பேரமைதியில்,
இங்குள்ள நிகழ்வுகளை,
எங்கோ தூரத்தில்,
எல்லையில் நின்று,
வலையொளியில் கண்டால்,
சொந்தப் பிள்ளைகளுக்குள்,
சொத்துப்பிணக்கை கண்டு,
தேம்பியழும் தாயைப்போல்,
பெரும் துயரில்,
கால்கடுக்க வருந்தி
நிற்கும் எல்லைச்சாமிகள்.

இந்த கார்த்திகையில்,
இதுவரை இல்லாத,
வருத்தங்களும் வேறுபாடும்,
அது ஒருபுறமிருக்க...

அதே கார்த்திகையில்,
களம் கண்ட
எல்லைச்சாமி ஒன்று
இன்று இல்லை.
தெரியுமா உங்களுக்கு?
அவர் தீரர்
அறுபடை வீட்டின்
ஐந்தாம் வீடாம்
திருத்தணியின் வீரமகன்
அவர் சக்திவேல்,
உறவினரின் தேவைக்கு
அடுத்த விடுப்பில்,
ஊர் திரும்பும்
திட்டம் இருந்திருக்கும்,
தாயும், பிள்ளையுங்காண,
தீரனின் மனந்துடித்திருக்கும்...
வேலை ஓய்விற்குள்
முடிக்க வேண்டிய
வீட்டுத் தேவைகள்
நிறைய இருந்திருக்கும்.
மலைப்பனியில் மரத்துப்போன,
விரல்களை பார்த்தபடி,
மனக்கவலை இருந்திருக்கும்.
ஆனால் இம்முறை,
வீடு திரும்பாமல்,
துயரத்தில் ஆழ்த்தி,
தேசியக்கொடி போர்த்தி,
தேசம் காத்திட
உயிர் நீத்த
எல்லைச்சாமி அவர்.


ஆனால் நமக்கென்ன?
ஒருநாள் கடக்கும் செய்தி....
பத்திரமாய் வீட்டிற்குள்
கதவடைத்து அமருங்கள்...
மார்கழிப்பனி இருக்கும்.
அடுப்பில் டீ போட்டு
அரசியல் பேசுங்கள்.
எல்லைக்காவல் சாமிகள்
எப்போதும் நாடு காக்கும்.

எல்லையில் மட்டுல்ல,
உள்ளுக்குள்ளும் நிறைய,
மத்தியோ மாநிலமோ,
காக்கும் காவல்சாமி,
நல்லதோ கெட்டதோ
நேரில் செல்லாமல்,
ஊரார் நலன்கருதி,
உழைக்கும் காக்கி.

உங்களுக்கே தெரியாமல்
நீங்கள்
நடக்கும் சாலையிலும் ,
நகரும் பேருந்திலும்,
நள்ளிரவின் நிழலிலும்,
தன்னலம் கருதாது
தன்கருத்தை உள்அடக்கி,
நமைகாத்து நிற்கும்
நல்காவல் சாமிகள்.


நல்குடிமக்கள் நீங்கள்,
நல்லிணக்கமாய் இருந்தால்,
அதுவே போதும்.
அகம்மகிழ்ந்து அவர்கள்
சற்றே கண்ணயர்ந்து
இளைப்பாறி ஓய்வெடுப்பார்.
Balaji Vedharajan 🙏🙏🙏

No comments: