Thursday, March 1, 2012

Changing mangroves in Palk Bay!..(என்னாச்சு இந்த காடுகளுக்கு?)



முத்துபேட்டையில் உள்ள லகூன் என்று அழைக்கப்படும் கடலோர ஏரியை சுற்றி உள்ள மேங்ரோவ் காடுகளின் வளர்ச்சியை செயற்கை கோள் புகைப்படங்களை கொண்டு ஆய்வு செய்தேன்.

இந்த ஆய்வின் படி, கடந்த 2003 ஆம் வருடத்தில் எடுக்கப்பட்ட செயற்கை கொள் புகைப்படத்துடன், 2011 வருடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஒப்பிட்டு பார்த்தேன்.  

இந்த கடலோர ஏரியின் (லகூன்) வடகிழக்கு, தெற்கு, வடமேற்கு போன்ற இடங்களில் உள்ள காடுகளின் பரப்பளவை துல்லியமாக கணக்கிட்டு, பின்பு அதே பகுதிகளின் தற்போதிய காடுகள் உள்ள சூழலையும் ஒப்பிட்டு பார்த்தேன்.

இந்த செயல்களை செய்வதற்கு சில தொழிநுட்ப (GIS) ரீதியிலான திறனும், காடுகளின் வகைகளை செயற்கைக்கோள் புகைப்படங்களில் உள்ள நிற வேற்றுமையை கொண்டு வேறு படுத்தி பார்க்கும் ஆய்வக - கள பயிற்சியும் தேவையாகும்.  

பல்வேறு இலவச மென் பொருட்களை கொண்டும் சில அடிப்படை ஆய்வுகளை செய்யலாம்.  இப்போது மீண்டும் விஷயத்திற்கு வருவோம்.

இந்த ஆய்வின்படி, முத்துபேட்டை லகூனில் உள்ள வட கிழக்கு மூலையில் (கிளைதாங்கி மற்றும் மரைக்கா கோரையாறு பகுதிகள்) காடுகளின் பரப்பு, கடந்த 2003 ஆம் வருடத்திலிருந்து 2011 ஆம் வருடத்திற்குட்பட்ட எட்டு வருடங்களில் 26.7 ஹெக்டர் அளவிற்கு அதிகரித்துள்ளது (படம் மேலே உள்ளது). 

தற்போதைய உலக சூழலில், இருக்கும் காடுகளை காப்பதே பெரும்பாடாக இருக்கும் நிலையில், இயற்கையாகவே இந்த பகுதியில் உள்ள மங்க்ரோவ் காடுகள் அதிகரித்து உள்ளது நல்ல விஷயமாகும்.

அதே சமயம், காடுகளின் பரப்பு, லகூனை நோக்கி விரிவுபட்டு இருப்பதால், வருங்காலத்தில் இந்த லகூன் சுருங்கி விடும் வாய்ப்பு உள்ளது.  நீர்பிடிப்பு பகுதிகளில் மரங்கள் வெட்டப்படுவதும், ஆறுகளில் மணல் அள்ளப்படுவதும் அதிகரித்து உள்ளதால் அங்கு உள்ள நுண்ணிய மண் பொருட்கள் (களி) அதிகமாக அடித்து வரப்பட்டு, அதன் காரணமாக லகூன் நீர்பிடிப்பு பகுதியின் ஆழம் குறைந்து, அந்த சேற்று பகுதியில் காடுகள் வேகமாக விரிவுபட்டு இருக்கலாம் என்றும் கணிக்க முடிகிறது.  லகூனின் நீர்பிடிப்பு பகுதியின் பரப்பு குறையும்போது அதை சார்ந்த சிறு, குறு, எளிய மீனவர்களின் மீன்பிடி தொழிலும் பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்படலாம்.   இந்த கூற்றை மெய்பிக்கவோ அல்லது பொய்பிக்கவோ வேண்டுமெனில் மேலும் கள ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.. 

அதே போலவே, லகூனின் வட கிழக்கு மூலையிலும், முகத்துவார பகுதியிலும் காடுகள் சீராக அதிகரித்து உள்ளன.