மாசாத்துவான்
மகள்
மகிழ்ந்து
நடந்த,
புகாரின்
வீதி - கடலுக்குள்
இன்று,
கொம்பன்
சுறா காவலுக்கு.
கொற்கைக்
கோமான்
கொலுவில்
அமர்ந்த,
முத்துப்
பீடம் – கடலுக்குள்
இன்று,
முந்நீர்
வாழ் சிப்பிகள் காவலுக்கு.
மாமல்லனின்
குடைவரை
எஞ்சியது
ஒன்று
மீதம் ஆறும் - கடலுக்குள் இன்று,
காவலுக்கு
கடல் ஓங்கிகள் .
தொப்புள்கொடியாம்
ஈழம்-
குமரிக்கண்டத்
தொன் தமிழர்
அதை
நடந்தே
கடந்திருப்பாரோ?
கடல்கோள்
தமிழ்நிலம்
கேட்டால் பல
கதைகள் கதைக்கும்,
நகரும்
மணல்மேடுகளும் – நம்
தீவுகள்
இருபத்தொன்றும்
கோடி யென முடியும்
மூன்று
நிலமுனைகளும்,
கிழக்கே
நீண்டு தொப்புள்கொடியாய்
இணைந்திருந்திருக்கும்
– அதை
அன்றே ஆழி
தின்று தீர்த்திருக்குமோ!
தமிழ்நிலச்
சான்றோரே,
அறிவியல்
சொல் கேளீர்,
எம் கேளிரெ!
ஆழிக்கு
அழிவில்லை - ஆயினும்
மணல் வற்றிய
ஆற்றின் வழி
கடல்
நிரம்பி காவிரிச் சமவெளியில்
கண்மாய்கள் நிறைக்கும்
கரும்புகை
கக்கும் கணவாய்கள்
காவல்
காக்கும்.
தமிழ் நிலம்
காப்பீர்.
No comments:
Post a Comment