Tuesday, April 21, 2026

கொம்பன் சுறா காவலுக்கு

மாசாத்துவான் மகள் 
மகிழ்ந்து நடந்த, 
புகாரின் வீதி  - கடலுக்குள் இன்று,
கொம்பன் சுறா காவலுக்கு. 

கொற்கைக் கோமான் 
கொலுவில் அமர்ந்த, 
முத்துப் பீடம்  – கடலுக்குள் இன்று,
முந்நீர் வாழ் சிப்பிகள் காவலுக்கு. 

மாமல்லனின் குடைவரை 
எஞ்சியது ஒன்று  
மீதம் ஆறும்  - கடலுக்குள் இன்று,
கடல் ஓங்கிகள் காவலுக்கு. 

தொப்புள்கொடியாம்  ஈழம் – நிலத்
தொடர்பில் இருந்திருக்கும்
சோழக்  காலத்தினின்றும் மூத்தத் 
குமரிக்கண்டத் தொன் தமிழர் அதை 
நடந்தே கடந்திருப்பாரோ?

கடல்கோள் தமிழ்நிலம் 
கேட்டால் பல கதைகள் கதைக்கும், 
நகரும் மணல்மேடுகளும் – நம் 
தீவுகள் இருபத்தொன்றும்   
கோடிகள் என முடியும் 
மூன்று நிலமுனைகளும்,
கிழக்கே நீண்டு தொப்புள்கொடியாய் 
இணைந்திருந்திருக்கும் – அதை 
அன்றே ஆழி தின்று தீர்த்திருக்குமோ!

தமிழ்நிலச் சான்றோரே,
அறிவியல் சொல் கேளீர்,
ஆழிக்கு அழிவில்லை - ஆனால் 
மணல் வற்றிய ஆற்றின் வழி 
கடல் நிரம்பி காவிரிச் சமவெளியில் 
கண்மாய்கள்  நிறைக்கும்
கரும்புகை கக்கும் கணவாய்கள் 
காவல் காக்கும். 

தமிழ் நிலம் காப்பீர். 

Balaji Vedharajan

No comments: