மாசாத்துவான் மகள்
மகிழ்ந்து நடந்த,
புகாரின் வீதி - கடலுக்குள் இன்று,
கொம்பன் சுறா காவலுக்கு.
கொற்கைக் கோமான்
கொலுவில் அமர்ந்த,
முத்துப் பீடம் – கடலுக்குள் இன்று,
முந்நீர் வாழ் சிப்பிகள் காவலுக்கு.
மாமல்லனின் குடைவரை
எஞ்சியது ஒன்று
மீதம் ஆறும் - கடலுக்குள் இன்று,
கடல் ஓங்கிகள் காவலுக்கு.
தொப்புள்கொடியாம் ஈழம் – நிலத்
தொடர்பில் இருந்திருக்கும்
சோழக் காலத்தினின்றும் மூத்தத்
குமரிக்கண்டத் தொன் தமிழர் அதை
நடந்தே கடந்திருப்பாரோ?
கடல்கோள் தமிழ்நிலம்
கேட்டால் பல கதைகள் கதைக்கும்,
நகரும் மணல்மேடுகளும் – நம்
தீவுகள் இருபத்தொன்றும்
கோடிகள் என முடியும்
மூன்று நிலமுனைகளும்,
கிழக்கே நீண்டு தொப்புள்கொடியாய்
இணைந்திருந்திருக்கும் – அதை
அன்றே ஆழி தின்று தீர்த்திருக்குமோ!
தமிழ்நிலச் சான்றோரே,
அறிவியல் சொல் கேளீர்,
ஆழிக்கு அழிவில்லை - ஆனால்
மணல் வற்றிய ஆற்றின் வழி
கடல் நிரம்பி காவிரிச் சமவெளியில்
கண்மாய்கள் நிறைக்கும்
கரும்புகை கக்கும் கணவாய்கள்
காவல் காக்கும்.
தமிழ் நிலம் காப்பீர்.
Balaji Vedharajan
No comments:
Post a Comment