Tuesday, April 21, 2026

சித்திரையில் பூக்கும் வாட்டாளை

இந்த சித்திரை துவங்கிய நன்னாளில், நம் கடலில் இன்று எடுக்கப்பட்ட புகைப்படம். வாட்டாலை  (கடல் தாழை) என அழைக்கப்படும் Enhalus accoroides பூக்க துவங்கி உள்ளது.  சித்திரை மாதத்தில் இவ்வாறு மலர்வது, இந்த வருட பருவநிலை மாற்றங்களின் இயற்கையான சீரான ஓட்டத்தைக் குறிக்கும் விதமாக இருக்கலாம்.

இந்த கடல்புல் இனத்தில் ஆண் மற்றும் பெண் பூக்கள் தனித்தனியாக இருக்கும். ஆண் பூக்கள் சிறியதாகவும், முதலில் கடலடியில் உருவாகி பின்னர் நீர்மேற்பரப்பிற்கு விடப்படுவதும் சிறப்பு. 
எனவே, "வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு" எனும் திருக்குறளுக்கு, இவற்றையும் உவமையாக கொள்ளலாமோ! 

ஆண் மலர்கள்  நீரில் மிதந்து மேலே வந்து உடைந்து, உள்ளிருக்கும் மகரந்தத் துகள்களை வெளியிடுகின்றன. பெண் பூக்கள் நீண்ட தண்டு மூலம் நேரடியாக நீர்மேற்பரப்பை அடைந்து திறக்கின்றன. இரு கைகளை விரித்தது 
போல, பெண் பூக்கள் நீரின் மேற்பரப்பில் மிதந்து காத்திருக்கும். அப்போது, நீர்மேல் மிதக்கும் ஆண் பூக்களில் இருந்து வெளியான மகரந்தம்,  அலைகளின் உதவியுடன் பெண் பூவிற்கு சேர்கிறது. இது “மேற்பரப்பு மகரந்தச் சேர்க்கை” (surface pollination) எனப்படும், கடல் தாவரங்களில் மிக அரிதாக காணப்படும் ஒரு அற்புதமான இயற்கை செயல்முறை.

இந்த தாவரத்தின் காய்களை நாம் உண்ணலாம்.  இந்த வகை கடல் தாழைகள்  பொதுவாக ஆழமில்லாத (shallow) கடல்பகுதிகளில் மட்டுமே வளரும். இதற்கு முக்கிய காரணம், அதன் இனப்பெருக்க செயல்முறை நீர்மேற்பரப்புடன் நேரடி தொடர்பு கொண்டிருப்பது. 

நீர் ஆழம் அதிகமாக இருந்தால், பெண் பூ நீர்மேற்பரப்பை எட்ட முடியாது; அதனால் மகரந்தச் சேர்க்கை நடைபெறாது. மேலும், இந்த தாவரத்திற்கு சூரியஒளி மிகவும் அவசியம், ஏனெனில் அது ஒளிச்சேர்க்கை மூலம் உணவுத் தயாரிப்பைச் செய்கிறது. ஆழமான, மங்கலான நீரில் ஒளி குறைவதால் வளர்ச்சி பாதிக்கப்படும். 

இதனால், தெளிவான, ஒளி ஊடுருவும், அமைதியான, ஆழமில்லா கடற்பகுதிகளே  இவற்றின் வளர்ச்சிக்கும், மலர்ச்சிக்கும், இனப்பெருக்கத்திற்கும் மிக உகந்த சூழலாக அமைகின்றன.

இந்த கடல் தாழைகள் பல கடல் உயிரினங்களுக்கு முக்கிய வாழ்விடமாக செயல்படுகிறது. குறிப்பாக கடல் பசு (dugong), கடல் ஆமைகள் போன்றவை இவற்றை உணவாக பயன்படுத்துகின்றன. 

மேலும், இளம் மீன்கள், நத்தைகள், சிறிய முதுகெலும்பில்லா உயிரினங்கள் போன்றவை இந்தப் புல்வெளிகளில் பாதுகாப்பாக வளர்கின்றன. இதனால், கடல்புல் படுகைகள் மீன்பிடி வளத்தை அதிகரிக்கும் “நர்சரி பகுதிகள்” ஆக செயல்படுகின்றன. 

கூடுதலாக, கடல் புற்கள் அலைகளின் வேகத்தை குறைத்து, மணல் நகர்வை கட்டுப்படுத்தி, கடற்கரை மண் அரிப்பை  (coastal erosion) தடுக்கும் இயற்கை பாதுகாப்பு அமைப்பாகவும் செயல்படுகின்றன.

வாட்டாலைகளின் பரப்பு, கடந்த இருபது ஆண்டுகளில்  வெகுவாக குறைந்தது வருகிறது. 

கடல் வளம் காப்போம்! 

Balaji Vedharajan

No comments: